இதயத்தின் வேண்டல்

குறிப்பு 1: நமது உடலில் 12 இணை விலா எலும்புகள் உள்ளன, அதாவது மொத்தம் 24. அதில் முதல் 7 இணைகள் உண்மை விலா எலும்புகள் அடுத்த 3 இணைகள் போலி விலா எலும்புகள் அடுத்த & கடைசியான 2 இணைகள் மிதக்கும் விலா எலும்புகள்.

குறிப்பு 2: "தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்." ஆதியாகமம் - 2: 21 - 24

குறிப்பு 3: திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்படும்போது, செய்யப்படும் நபரின் இதயத்தை ஒட்டியுள்ள ஒன்றிரண்டு விலா எலும்புகள் உடைக்கப்படும், அப்போதுதான் முழுமையாக அச்சிகிச்சையை சிறப்பாக செய்யமுடியும். அதனால்தான் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களை கவனமாக இருக்கச் சொல்லி அறிவுறுத்துவார்கள் மருத்துவர்கள்.

இம்மூன்று குறிப்புகளில் முதல் மற்றும் கடைசி குறிப்புகளுக்குக்கூட ஏதேனும் சம்பந்தம் இருப்பதுபோலுள்ளது ஆனால் நடுவிலுள்ள குறிப்புக்கும் இவ்விரண்டிற்கும் துளிகூட சம்பந்தம் இல்லையேயென்று உங்களுக்கு தோன்றுகிறதா? அல்லது ஏதேனும் சம்பந்தம் இருந்தாலும் இருக்கலாம் என்னவென்று பார்ப்போம் என்று தோன்றுகிறதா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்குத்தான், தொடர்ந்து படியுங்கள்.

நீங்கள் நினைத்தது உண்மைதான் சம்பந்தம் இல்லைதான் ஆனால் நான் இங்கு சம்பந்தப் படுத்தியிருக்கிறேன். அதாவது கிறிஸ்தவர்களின் விசுவாசப்படி திருமணம் என்பது கர்த்தரால் நடத்தப்படுவது, அவ்விரு மணமக்களும் கர்த்தராலேயே இணைக்கப்படுவர். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் ஒவ்வொரு ஆணிலிருந்து எடுக்கப்பட்ட விலா எலும்பாக இருக்கின்ற பெண்ணே அந்த ஆணிற்கு பொருத்தமான மனைவியாக துணையாக அமையப்பெறுவர். அது எப்படியாகிலும் அப்படிதான் கர்த்தரால் அமையவும்பெறும்.



இப்பதிவை படிக்கின்ற உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும்கூட இருக்கலாம் தப்பில்லை, எனக்கும் இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள் ஒரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர். அப்படியானால் என்ன அர்த்தம், எனக்கும் ஒருசில விலா எலும்புகள் உடைக்கப்பட்டிருக்கும். ஆகவே என்னுடைய விலா எலும்பு உடைக்கப்பட்ட காரணத்தால் எனக்கு திருமணமே ஆகாது என்று சொல்லிவிட முடியுமா, அல்லது திருமணமே வேண்டாம் என்றுதான் சொல்லிவிடலாமா, முடியாதுதானே.

அது தேவனுடைய சித்தமாயினும், எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்திருப்பது நன்கு தெரிந்திருந்தும், "நான், உடைக்கப்பட்ட உன்னுடைய விலா எலும்பிற்கு பதிலாக உன்னிலிருந்து எடுக்கப்பட்ட விலா எலும்பாக உன்னுடைய துணையாக இருந்து உன் இருதயத்தைக் காத்துக்கொள்வேன், நாம் திருமணம் செய்துகொள்வோமா?" என்று வெளிப்படையாக மனந்திறந்து கூறும் ஒரு தேவதை இவ்வுலகத்தில் எங்கேயாகிலும் இருப்பாளேயென்றால், அவளே எனக்கானவள் என் விலாவானவள் என்று எடுத்துக்கொள்ளலாம் தானே மேலும் கர்த்தரே அவரது சித்தப்படி எங்களிருவரையும் இவ்வாறாக இணைத்திருக்கிறார் என்றும் கொள்ளலாம்தானே.

அப்படியொரு அதிசயம் நமக்கு ஒருவேளை நிகழப்பெற்றால் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும் யாராக இருந்தாலும் ஒத்துக்கொள்ளத்தானே தோன்றும், உதாரணத்திற்கு ஒரு தேவதை அப்படி நிஜமாகவே இருப்பதாகவே கொள்வோம். இங்கு நான் பெரிதும் பார்த்து ஆச்சரியப்பட்டு வியந்து பார்ப்பது அப்படிப்பட்ட ஒரு பெண்ணை இவ்வளவு நேர்த்தியாய் வளர்த்த அவளது பெற்றோரை, எப்பேற்பட்ட ஆவிக்குரிய ஜீவியத்தின்படி கர்த்தருக்குள் வளர்த்திருப்பர், அப்பெண்ணும் குணசாலியான ஸ்திரீயாய் போற்றப்பட வேண்டுமல்லவா..?!

அப்படிப்பட்ட தேவதைகளையே அனைவரும் தங்களுக்கு மனைவியாகக் கண்டடையும்படியாக, கண்டடையத்தக்கதாக எல்லாரும் வேண்டுதல் செய்யும்படியாக நான், திருமணம் ஆகாத அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். இப்படிப்பட்ட தேவதைகள் நம்மிடையே இருகின்றனர், அப்படியானவர்களை போற்றும்விதமாக இப்பதிவை அப்படிப்பட்ட எனக்கான தேவதைக்காகவும் சேர்த்து, ஒருவேளை இருக்கும்பட்சத்தில் பட்சத்திலேயே இருக்கும்படி நம்பிக்கையுடன் கர்த்தரின் நாமத்திற்கு மகிமையுண்டாக சமர்ப்பிக்கிறேன்.

நன்றி.!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைவில் நின்றவர்கள்

பிரியமுடன் பிரியாவிடை

மாற்றமில்லை